செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் காவல் உதவி ஆய்வாளர் குமுதா கலந்து கொண்டு பேசியதாவது:
மாணவிகள் பள்ளிக்கு வரும்போது வழியில் யாராவது கேலி, கிண்டல் செய்தால் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்தவரின் விவரங்கள் வெளியே தெரியாத வகையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அறிமுகம் இல்லாத நபர்களுடன் மாணவிகள் இரு சக்கர வானங்களில் செல்லக் கூடாது. வாகனம் ஓட்டும்போது, அசல் ஓட்டுநர் உரிமத்துடன், தலைக்கவசம் அணிந்து ஓட்ட வேண்டும். இணையதள மையங்களுக்கு மாணவிகள் தனியாகச் செல்லக் கூடாது. கிராமங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.