திருவண்ணாமலையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அண்மையில் நடத்தின.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்துப் பேசினார்.
இந்த முகாமில், டிவிஎஸ் டிரெயினிங் அன்ட் சர்வீசஸ், கிளஸ்டரல் நிறுவனங்கள், அப்பல்லோ மருத்துவமனை உள்பட 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், திறன் பயிற்சி வழங்குபவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிறுவனங்களில் மேற்பார்வையாளர், கணினி இயக்குபவர், மேலாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்புக்கு குறைவாகவும், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டம், பட்டயம், தொழில்நுட்பப் படிப்பு, பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட கல்வித் தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகளிடையே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 700-க்கும் மேற்பட்ட பணி நாடுநர்கள் கலந்து கொண்டனர். இவர்களில், 185 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பணி நியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் க.விஜயா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.