வேட்டவலம் அருகே குடிநீர் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேட்டவலத்தை அடுத்த பன்னியூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அந்தப் பகுதி ஏரியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திடீரென கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஞாயிற்றுக்கிழமை காலிக் குடங்களுடன் குடிநீர் கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே வந்த அரசுப் பேருந்தையும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேட்டவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படும் என்று போலீஸார் அளித்த உறுதிமொழியை ஏற்று, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். மறியலால் அந்தச் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.