256 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 256 மாற்றுத் திறனாளிகளுக்கு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 256 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.45 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
 குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பல்வேறு உதவித் தொகைகள் பெறுவதற்கான 405 மனுக்களைப் பெற்றார்.
 இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
 புகைப்படம் எடுக்கும் பிரிவு தொடக்கம்: ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அடையாள அட்டை பெற புகைப்படம் இல்லாமல் வரும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக ரூ. 34,425 செலவில் அமைக்கப்பட்ட இலவச பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுக்கும் பிரிவை ஆட்சியர் திறந்து வைத்தார்.
 ஆட்சியரின் தன் விருப்பக் கொடை நிதியில் இருந்து 104 காது கேளாதோருக்கு தலா ரூ. 840 வீதம் மொத்தம் ரூ. 87,360 செலவில் காதொலி கருவிகள், 40 பேருக்கு ரூ. 1,80,000 செலவில் காதுக்குப் பின்னால் அணியும் காதொலி கருவிகள், 12 பேருக்கு ரூ. 1,08,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 100 பேருக்கு ரூ. 1,35,000 மதிப்பிலான வாக்கர்கள் என மொத்தம் 256 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.45 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் பானு உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
 சட்டை தைத்துத் தர ரூ. 200 கூலி
 துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடகரிக்கலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் சந்தோஷுக்கு இலவச தையல் இயந்திரத்தை ஆட்சியர் வழங்கினார். அப்போது, சந்தோஷிடம் தனக்கு ஒரு சட்டை தைத்துத் தர முடியுமா? என்று ஆட்சியர் கேட்டார்.
 அவர், உடனே தனது கையில் வைத்திருந்த டேப்பை எடுத்து ஆட்சியருக்கு சட்டை தைப்பதற்கான அளவை எடுத்தார். இதையடுத்து, தனது வீட்டில் இருந்த சட்டைத் துணியை எடுத்து வரச் செய்த ஆட்சியர், அதை சந்தோஷிடம் வழங்கி தையல் கூலியாக ரூ. 200 -ஐயும் வழங்கினார். இதைச் சற்றும் எதிர்பாராத சந்தோஷ் ஆட்சியரிடம் இருந்து சட்டைத் துணியையும், தையல் கூலியையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, இரு நாள்களில் சட்டையைத் தைத்து எடுத்து வருவதாகக் கூறிச் சென்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com