ஆரணி நகரில் அனுமதியின்றி டிஜிட்டல் பதாகைகளை வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணி நகரக் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி எச்சரித்தார்.
டிஜிட்டல் பதாகை கடை உரிமையாளர்கள், சாரம் கட்டுபவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆரணி நகரக் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆரணி டி.எஸ்.பி. செந்தில் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற நகரக் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி பேசியதாவது: ஆரணி நகரத்தில் உரிய அனுமதியின்றி, பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்படுகின்றன. அவ்வாறு வைக்கப்படும் பதாகைகள் உடனடியாக அகற்றப்படும்.
மேலும், கடைகள், வணிக நிறுவனங்கள் எதிரே பதாகைகளை வைக்கக் கூடாது. இதுகுறித்து கடைகளின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். சூரிய குளம் பகுதி, கோட்டை மைதானம் பகுதி உள்ளிட்ட இடங்களில் பதாகைகளை அனுமதி பெற்று வைத்துக் கொள்ளலாம். பொதுமக்களும் அனுமதி பெறாமல் டிஜிட்டல் பதாகைகளை வைக்கக் கூடாது.
ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.
உரிய அனுமதி பெறாமல் டிஜிட்டல் பதாகைகளை வைத்தால், அவை அகற்றப்படுவதுடன், சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
கூட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி. தங்கமணி, எஸ்.ஐ. ஜமீஸ்பாபு, டிஜிட்டல் பதாகை கடை உரிமையாளர்கள் சந்துரு, முரளி, மோகன், ஆறுமுகம், சாரம் கட்டும் உரிமையாளர்கள் பிரகாஷ், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.