செய்யாறை அடுத்த மாங்கால் கூட்டுச்சாலை பகுதியில் அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதைக் கண்டித்து, தலித் அமைப்பினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, இந்திய குடியரசுக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் மாங்கால் கூட்டுச்சாலைப் பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பதாகைகளில் இருந்த அம்பேத்கர் படத்தை மட்டும் மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனையறிந்த கட்சி நிர்வாகிகள், தலித் அமைப்பினர் அந்தப் பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து வந்த தூசி போலீஸார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். மேலும், பதாகைகளை கிழித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.