உழவன் செயலி மூலம் அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையலாம் என வேளாண் துறை தெரிவித்தது.
இதுகுறித்து அனக்காவூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையில், தமிழக அரசின் வேளாண் துறை "உழவன் செயலி' என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம், அரசு வழங்கும் மானியத் திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விவரங்கள், உரங்களின் இருப்பு நிலை, விதைகள் இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மைய விவரங்கள், விளை பொருள்களுக்கான சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, தங்களது பகுதிக்கு உதவி வேளாண் அதிகாரி வருகை குறித்த விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் இந்தச் செயலியைத் தங்களது செல்லிடப்பேசியில் தரவிறக்கம் செய்து பயனடையலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.