திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமுதாய மருத்துவப் பிரிவு, மங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இந்த விழாவை கொண்டாடின. விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜா தலைமை வகித்தார்.
சுகாதார மேற்பார்வையாளர் பி.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவர்கள் அரவிந்தன், சிவக்குமார், நித்யா, வைதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுடன் கலந்துரையாடினர்.
மேலும், தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.
தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தயாரித்த தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டன.