தனது பணிப்பதிவேடு எங்கு உள்ளது என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்காததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த அடகுக் கடை உரிமையாளர் செல்வராஜ் (40). இவரது மனைவி மீரா (35). இவர், தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணி மாறுதல் பெற்று பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மீரா தற்கொலைக்கு முயன்றாராம்.
இதைக் கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு, திருவணணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் இயக்குநருக்கு மீரா தனது கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
அந்தக் கடிதத்தில் மீரா கூறியுள்ளதாவது: 2009-இல் பணியில் சேர்ந்த நான் இதுவரை குறைவான சம்பளம் பெறுகிறேன். எனக்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்கள் என்னைவிட அதிக சம்பளம் வாங்குகின்றனர்.
எனவே, என்னுடைய பணிப் பதிவேட்டில் உள்ள விவரங்களைப் பார்வையிட திருவண்ணாமலை மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்துக்கும், சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்துக்கும் 2 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டேன்.
இதுவரை என்னுடைய பணிப் பதிவேடு எங்குள்ளது என்று தெரியவில்லை. அதிகாரிகளும் பதிவேட்டை காண்பிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நான் தற்கொலைக்கு முயன்றேன். என் மரணத்துக்கு மருத்தவ நலத் துறை அதிகாரிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.