செங்கம் செடல் மாரியம்மன் கோயிலில் செங்கம் நகர மலர்தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில், பூப்பல்லக்கு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற்றது.
விழாவையொட்டி, மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காக்கங்கரை விநாயகர் கோயிலில் இருந்து பால் குடங்களுடன் பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடமணிந்து போளூர் சாலை, துர்க்கையம்மன் கோயில் தெரு வழியாக ஊர்வலமாக தளவாநாய்க்கன்பேட்டையில் அமைந்துள்ள செடல் மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு பல்வேறு மலர்களால் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு, பூப்பல்லக்கு விழா நடைபெற்றது. விழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததுடன், மாரியம்மனை வழிபட்டனர்.