மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 18) மாலை 5 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருள்களை வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருள்களை வழங்கலாம்.
பால் பவுடர், சர்க்கரை, வெல்லம், மெழுகுவர்த்தி, தண்ணீர் புட்டி, தீப்பெட்டி, குளோரின் மாத்திரைகள், அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், ரஸ்க், டார்ச் லைட், போர்வைகள், துண்டுகள், புதிய ஆடைகள் உள்ளிட்டவற்றை நிவாரணப் பொருள்களாக வழங்கலாம்.
இந்த நிவாரணப் பொருள்களை சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு வருவாய்க் கோட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம். திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அலுவலர் சி.தங்கவேலுவை 9445000420, 04175 - 252432 என்ற எண்களில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கலாம்.
இதேபோல, செய்யாறு வருவாய்க் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்யாறு கோட்டாட்சியர் இரா.அன்னம்மாளை 9445000419, 04182 - 222235 என்ற எண்களிலும், ஆரணி கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணியை 94450745971, 04173 - 222286 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.