திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்கள் மீது தொழிலாளர்கள் நலத் துறை சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில், துணை, உதவி ஆய்வாளர்களான சாந்தி, மனோகரன், தனலட்சுமி ஆகியோரைக் கொண்ட அதிகாரிகள் குழு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் சுதந்திர தினத்தன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அன்று மொத்தம் 147 நிறுவனங்களில் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது. அப்போது, பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காதது, சுதந்திர தினத்துக்குப் பதிலாக மாற்று விடுமுறை அளிக்காதது, அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது என பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டது கண்டறியப்பட்டது.
அதன்படி, கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 56 நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 10 என மொத்தம் 101 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில்குமரன் தெரிவித்தார்.