திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சனிக்கிழமை திடீரென ஆய்வில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில், திருவண்ணாமலை கடலைகடை சந்திப்பு உள்ளிட்ட நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அவர், நிழல்கூடத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இனிமேல், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் வரக்கூடாது.
மீறி பேருந்து நிலையத்துக்குள் வரும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீஸார், பொதுப்பணித் துறை, நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.