போளூர், ஆரணி, செய்யாறு பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்ற விழாக்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,228 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் வழங்கினர்.
போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன், ஆரணி எம்.பி. ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் மதிவாணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு போளூர், களம்பூர், கேளூர் ஆகிய அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2,188 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தாமரைச்செல்வி (போளூர்), பாக்கியவதி (களம்பூர்), முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆரணி: ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 182 மாணவர்களுக்கும், ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 23 மாணவர்களுக்கும் என மொத்தம் 205 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பி.ஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு: செய்யாறு தொகுதியைச் சேர்ந்த கொருக்கை, நெடும்பிறை, வாழ்குடை, கோவிலூர், மாமண்டூர், பிரம்மதேசம் உள்ளிட்ட 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,835 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் பி.நடராஜன் தலைமை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கே.மோகன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ தூசி கே.மோகன் கலந்து கொண்டு, விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் எம்.மகேந்திரன், டி.பி.துரை, எஸ்.கிருஷ்ணன், கே.வெங்கட்ராமன், அரங்கநாதன், செபாஷ்டியன்துரை, ராஜமாணிக்கம், பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.