வந்தவாசி அருகே சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக சென்று வர இலவச தனியார் பேருந்து பயண அட்டை உள்ளிட்டவற்றை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
வந்தவாசி அருகே தெள்ளாறை அடுத்த புதுவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (40). இவரது மனைவி ஜெயந்தி (34). முனியப்பனுக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால், காஞ்சிபுரம், வேலூர் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், உதவி கோரி முனியப்பன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் அண்மையில் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, முனியப்பன், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோருக்கு தனியார் பேருந்தில் தெள்ளாறிலிருந்து காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருவதற்கு ஓராண்டுக்கான இலவச பயண அட்டையை ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, வெள்ளிக்கிழமை மாலை புதுவணக்கம்பாடி கிராமத்துக்கு நேரில் சென்று அவர்களிடம் பயண அட்டைகளை வழங்கினார். மேலும், முனியப்பன் குடும்பத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், தையல் இயந்திரம் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.ராமரத்தினம், தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
ந.இராஜன்பாபு, ச.மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் எஸ்.சிவராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.