திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு இந்த பிரதோஷப் பூஜை நடத்தப்பட்டது.
பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் அலைமோதல்: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இவர்கள் அனைவரும் கோயிலில் நடைபெற்ற பிரதோஷப் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேட்டவலம்: பழைமையான வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மாள், பிரதோஷ நந்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு வெண் பொங்கல், சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
மற்ற ஊர்களில்..: இதேபோல, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்தப் பூஜைகளில் அந்தந்தப் பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.