செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
செய்யாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் அனக்காவூர் போலீஸார் வெள்ளை கூட்டுச்சாலை, இளநீர்குன்றம் ஆகிய பகுதிகளில் தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இளநீர்குன்றம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), பாதிரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (36), செந்தில் (30), மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். இதே போன்று, வெள்ளை கூட்டுச்சாலைப் பகுதியில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் இயத்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்து தப்பியோடிய மேல்பழந்தை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (26), வெள்ளை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (39) ஆகியோர் மீது அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.