வந்தவாசி சன்னதி தெரு - பருவதராஜகுல வீதி சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானசூறை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மகா சிவராத்திரி உற்சவம் நடைபெற்றது. பின்னர், புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா வந்தார்.
தொடர்ந்து, புதன்கிழமை மயானசூறை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், கோயிலிலிருந்து தொடங்கிய அம்மன் வீதியுலா பருவதராஜகுல வீதி, அச்சரப்பாக்கம் சாலை, பாலுடையார் தெரு, சன்னதி தெரு வழியாகச் சென்றது.
பக்தர்கள் காளி வேடமணிந்தும், உடலில் எலுமிச்சைப் பழம் குத்திக் கொண்டும், முதுகில் அலகு குத்தி உரல் இழுத்துக் கொண்டும் உடன் சென்றனர்.