திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீரமண மகரிஷி சுகாதார நிலையத்தில் இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சமூக நல முன்னேற்றச் சங்கத்தின் (சுவிஸ்) கீழ் ஸ்ரீரமண மகரிஷி சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மையமும், பெங்களூரு நாராயணா மருத்துவமனையும் இணைந்து இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாமை அண்மையில் நடத்தின. முகாமுக்கு ஸ்ரீரமண மகரிஷி சுகாதார நிலைய நிர்வாகத் தலைவர் ஆர்.ரேணுகோபால் தலைமை வகித்தார். நாராயணா மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
முகாமில், காதில் சீழ் வடிதல், காது கேளாமை, காதில் இரைச்சல், தலைச்சுற்றல், குரல் மாற்றம், தொண்டையில் சதை அடைப்பு, மூக்கடைப்பு, சைனஸ், மூக்கில் சதை வளர்தல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
பெங்களூரு நாராயணா மருத்துவமனை சிறப்பு மருத்துவர் ஆர்.வித்யா பூஷன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில், தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள், குழந்தைகள் மற்றும் ஆணாய்ப்பிறந்தான், அய்யம்பாளையம், அத்தியந்தல், பண்டிதப்பட்டு, கோலாப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஏற்பாடுகளை சமூக நல முன்னேற்றச் சங்கம் (சுவிஸ்) செய்திருந்தது.