வந்தவாசியில் புதன்கிழமை திருவிழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
வந்தவாசி புதுத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கௌதம் (13).
இவர், வந்தவாசி சன்னதி பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதே தெருவைச் சேர்ந்தவர் உசேன் மகன் காதர்பாஷா (11).
இவர், இதே பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் புதன்கிழமை வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள ஒரு கடையின் மாடியில் நின்று மயானக்கொள்ளை திருவிழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் கட்டடத்தை ஒட்டிச் சென்ற மின்கம்பி இவர்கள் மீது உரசியதால் இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இவர்களில் கௌதம் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த காதர்பாஷா வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த வந்தவாசி வட்டாட்சியர் கே.ஆர்.முரளிதரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.