திருவண்ணாமலையை அடுத்த சக்கரத்தாழ்வார் மடை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகமலா பீடத்தில் உலக நன்மைக்காக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் 108 தம்பதியர் கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரியையொட்டி, உலக நன்மைக்காக 108 யாக குண்டங்கள் அமைத்து 108 தம்பதியர் பங்கேற்ற சிறப்பு யாகம் நடைபெற்றது. பூஜையில் ஸ்ரீசதுர்வேதிநாயகி அம்மன், ஸ்ரீகமலா பீட உற்சவர்களான ஸ்ரீகமலதாரணி, ஸ்ரீகமலக்கண்ணன் மற்றும் ஸ்ரீஐஸ்வர்யேஸ்வர மூர்த்திகளுக்கு 108 தம்பதியினர் புனித நீரைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமலா பீட நிறுவனர் பொறியாளர் சீத்தா சீனிவாசன் செய்திருந்தார்.