திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 3 குளங்களை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
கிரிவலப் பாதையில் காட்டுக்குளம், தருமராஜாகுளம், அமட்டன் குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களை தூர்வாரி, சீரமைக்க திருவண்ணாமலை நீர்த்துளி இயக்கம், சென்னை இஎப்ஐ அறக்கட்டளை ஆகியவை முடிவு செய்தன. இதையடுத்து, ரூ.25 லட்சம் செலவில் குளங்களைத் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கி வைத்தார்.
காட்டுக்குளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், வட்டாட்சியர் ஆர்.ரவி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.