செங்கம் அருகே குப்பனத்தம் அணை அருகில் மேம்பாலம் அமைக்கக் கோரி, மலை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குப்பனத்தம் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் மலை கிராம மக்கள் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
செங்கத்தை அடுத்த குப்பனத்தம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்போது, இந்தப் பகுதியில் உள்ள செய்யாற்றைக் கடந்து மலை கிராமங்களுக்கு செல்ல வழியில்லை. எனவே, மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, குப்பனத்தம் அணை அருகில் உள்ள துரிஞ்சிக்குப்பம் பகுதியில் செய்யாற்றின் மீது மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.
மேலும், குப்பனத்தம் அணைக்கு அருகில் அமைந்துள்ள நாம நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தருவதுடன், இந்தப் பகுதியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பனத்தம் அணை கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், அந்த வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, விரைந்து பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.