செய்யாறில் குடும்பத் தகராறில் இளைஞர் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 6 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்யாறு பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி துரைசாமி. இவரது மூத்த மகன் தங்கராஜ் (29). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது, அதே நிறுவனத்தில் வேலை செய்த அரக்கோணம், பெருமுச்சி பகுதியைச் சேர்ந்த பிரேமாவை காதலித்து திருமணம் செய்து கொணடார். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த தங்கராஜ், செய்யாறு ஆற்றுப் பகுதியில் பச்சையம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை விஷம் குடித்து இறந்த கிடந்தார்.
மேலும், தனது சாவுக்கு மனைவி பிரேமா, மாமியார் சரோஜா, மாமனார் சந்திரன், பிரேமாவின் சகோதரர் மோகன் உள்ளிட்ட 6 பேர் தான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதே தகவலை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் குடும்பத்தினருக்கும், உடன் வேலை செய்து வரும் நண்பர்களுக்கும் அவர் அனுப்பியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து துரைசாமி அனுக்காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து, தங்கராஜின் சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், தங்கராஜ் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேமா, சரோஜா, சந்திரன், மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.