செங்கத்தில் வெள்ளிக்கிழமை சுவாமி விவேகானந்தரின் ரத ஊர்வலம் நடைபெற்றது.
செங்கம் சுவாமி விவேகானந்தா சேவா சங்கம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, சுவாமி விவேகானந்தர் ரதம் அலங்கரிக்கப்பட்டு, செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் ரத ஊர்வல தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவர் ராமமூர்த்தி குத்துவிளக்கேற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
ஊர்வலம் துக்காப்பேட்டையில் புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோயில் தெரு, போளூர் சாலை வழியாக செங்கம் ராமகிருஷ்ணா பள்ளியை சென்றடைந்தது.
பின்னர், அங்கு ரதத்துக்கு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பாண்டுரங்கன், செயலர் ராமமூர்த்தி, பொருளாளர் வெங்கடேஸ்வராபாபு, வழக்குரைஞர் கஜேந்திரன், கணேசர் குரூப்ஸ் ரவீந்தரன், விவேகானந்தா சேவா சங்க நிர்வாகிகள் பட்டறைசீனு, மரக்கடைசீனு, ராமஜெயம் மற்றும் செங்கம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.