கீழ்பென்னாத்தூரை அடுத்த ஐங்குணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் 2017-18ஆம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மூத்த குடிமகன் ராமமூர்த்தி தலைமை வகித்தார். உதவிப் பொறியாளர் தனவந்தன், சமூகத் தணிக்கை அலுவலர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கான நோக்கம் குறித்தும், திட்ட செயலாக்கத்தில் மக்களின் பங்கேற்பை அதிகரித்தல் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மேலும், கிராம சபை, கிராம ஊராட்சியை வலுப்படுத்துவதற்கான திட்ட செயல்பாட்டில் முன்னேற்றங்களைக் கொண்டு வருவது, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், பயனாளிகள் தற்போது மேற்கொள்ள வாய்ப்புள்ள பணிகள் குறித்து அவர் விளக்கினார்.
கூட்டத்தில், சமூக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஊராட்சிச் செயலர், தொழில்நுட்ப வல்லுநர் மூலமாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், கனேஷ்வரன் உள்பட கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.