வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மூலவர் முத்துமாரியம்மனுக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. பின்னர், ஆயுள் விருத்திக்காக ஸ்ரீசுக்த ஹோமம், கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
மாலையில் வைஷ்ணவிதேவி அலங்காரத்தில் உத்ஸவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.
விழாவில், கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.இலட்சுமண சுவாமிகள், அன்னதானக் குழுத் தலைவர் பிரபாகரன், பொருளாளர் ர.செல்வம் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.