செய்யாறில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இருதய நோய் கண்டறியும் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் வி.கோவிந்தன் தலைமை வகித்து தொடக்கிவைத்தார். நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் பழனி, தாய்-சேய் நல மருத்துவ அலுவலர் தமீம்கான், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் ஜவகர்பாபு ஆகியோர் மேற்பார்வையில் முகாம் நடைபெற்றது.
முகாமில், தனியார் மருத்துவமனை இருதய நோய் சிறப்பு மருத்துவர் துர்காதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று, 107 பேருக்கு பரிசோதனை செய்தனர். இதில், 11 பேர் இருதய அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். 45 பேருக்கு மாத்திரை மூலமாக குணப்படுத்தலாம் என ஆலோசனைகளை வழங்கினர்.