செய்யாறை அடுத்த ராந்தம் கிராமத்தில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ராந்தம் கிராமத்தில் சிறப்பு முகாம் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ராந்தம், துரைராஜ் நகர், ஆதிதிராவிடர் குடியிருப்பு, நாயந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது.
இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் கிராம மக்களிடையே கல்வியின் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலை சுத்தம் செய்ததுடன், பல்வேறு இடங்களில் களப்பணி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்கள் இ.மாரிமுத்து, எம்.குமார், பெ.தேவி, பெ.பவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.