திருவண்ணாமலையில் மொபெட்டில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை, பே கோபுரம், 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் நாகராஜன் (62). இவர், தனது நண்பரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக திங்கள்கிழமை ரூ. ஒரு லட்சத்தை தனது மொபெட்டின் இருக்கைக்கு கீழே வைத்துவிட்டு, மொபெட்டை ஓட்டிச் சென்றாராம்.
பின்னர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீ கடை எதிரே மொபெட்டை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்தபோது, மொபெட்டில் இருந்த ரூ. ஒரு லட்சத்தை காணவில்லையாம். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.