செய்யாறில் மணல் கடத்தல் தடுப்பு, கண்காணிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியர் (பொ) கி.அரிதாஸ் தலைமை வகித்தார்.
கூட்டத்தின்போது, அனைத்து வட்டாட்சியர்களும் குழு அமைத்து தினந்தோறும் காலை, இரவு நேரங்களில் ஆற்றுப் பகுதிகளில் கண்காணித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
செய்யாறு கோட்டத்தில் ஆறுகளையொட்டிய கிராமங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆறுகளில் மணல் அள்ளப்படுவதைத் தடுக்கும் விதமாக, வாகனம் செல்லும் வழிகளில் பெரிய அளவில் பள்ளம் ஏற்படுத்திட வேண்டும். மேலும், வாகனங்கள் மணல் அள்ளிச் செல்லாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஆற்று மணல் திருட்டுத்தனமாக அள்ளிச் செல்லப்பட்டால், உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காலதாமதமின்றி உரிய நேரத்தில் வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்தால், உடனடியாக போலீஸ் உதவியுடன் மணல் அள்ளும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் வருவாய்க் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் ச.க.வேணுகோபாலன், கண்காணிப்பாளர் மு.சத்தியன், செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் உள்ள வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.