திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பெண் குழந்தை சிறப்பு இல்லத்தில் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் அண்மையில் சுமார் ஒன்றரை வயதான மனநிலை பாதிக்கப்பட்ட பெண் குழந்தை ஆதரவற்று கிடப்பதை பக்தர்கள் பார்த்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் வந்து குழந்தையை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இந்தக் குழந்தையை மயிலாடுதுறையில் உள்ள மனநலன் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு இல்லத்தில் சேர்க்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மயிலாடுதுறை குழந்தைகள் இல்ல நிர்வாகியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) வி.ஆர்.ரேணுகாதேவி உடனிருந்தார். முன்னதாக, குழந்தைக்கு ருக்கு என்று மாவட்ட ஆட்சியர் பெயர் சூட்டினார்.