திருவண்ணாமலை அருகே டெங்கு கொசுப் புழு உற்பத்திக்குக் காரணமான வீட்டு உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவர். எனவே, கிரிவலப் பாதையில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்து ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர்த் தொட்டிகள், பக்தர்கள் பயன்படுத்தும் இலவச கழிப்பறைகளை அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. அப்போது, கிரிவலப் பாதையையொட்டி இருந்த பிச்சமணி வீட்டின் சுற்றுப் பகுதியில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிச்சமணிக்கு ரூ.1,000 அபராதம் விதித்து, அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜி.அரவிந்த், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பா.சஞ்சீவிகுமார், தனி அலுவலர் ந.பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.