திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பிரசாரம், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சி.மகேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சவீதா வரவேற்றார்.
இதையடுத்து, எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் வரை எ.வ.வேலு எம்எல்ஏ பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்துப் பயணிகளிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, திருவண்ணாமலை எம்எல்ஏ அலுவலகம், கடலைக்கடை சந்திப்பு, காமராஜர் சிலை எதிரில் என நகரின் பல்வேறு இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்களை எ.வ.வேலு தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், மாநில தொமுச செயலர் க.சவுந்தரராஜன், மாநில பொறியாளரணி துணைச் செயலர் கு.கருணாநிதி, மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, ஒன்றியச் செயலர்கள் த.ரமணன், பெ.சு.தி.சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்டப் பிரதிநிதி குட்டி க.புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.