திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழர் கணக்கியல், மரபியல் கண்காட்சி, மாணவர் மரபு மையம் தொடக்க விழா, மாநில அளவிலான ஒரு நாள் வரலாற்றுத் துறை பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத் துறை, தமிழ் மரபு அறக்கட்டளை, மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொ) வே.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். பொறியாளர் (ஓய்வு) க.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியரும், வரலாற்றுத் துறைத் தலைவருமான ரா.ஸ்தனிஸ்லாஸ் வரவேற்றார்.
சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை (ஜெர்மனி) தலைவர் க.சுபாஷினி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்ததுடன், மாணவர் மரபு மையத்தையும் தொடக்கிவைத்துப் பேசினார். விழாவில், நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவர் து.தங்கராஜன், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலரும், வட்டாட்சியருமான ச.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், ஓய்வு பெற்ற இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநர் பெ.வெங்கடேசன், துளசிதாஸ் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் ரா.சேகர், ஓய்வு பெற்ற வேலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் ம.காந்தி உள்பட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில், பேராசிரியர் பா.ரஹமத்ஷா, ஓவியர் ப.ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் ப.மணியரசன், சு.பிரேம்குமார், கோ.மதன்மோகன், சு.சேது, க.நீதிதாஸ், த.வெங்கடேசன், வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் நா.ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.