செய்யாறு அருகே தூசி காவல் சரகத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
வெம்பாக்கம் வட்டம், பெரிய ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் ராமதாஸ் (45). விவசாயியான இவர், மோட்டார் சைக்கிளில் மாங்கால் கூட்டுச் சாலையில் இருந்து கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த அரசுப் பேருந்து ராமதாஸின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதனால், பலத்த காயமடைந்த ராமதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்றொரு விபத்து: காஞ்சிபுரம் - செய்யாறு சாலையில் மாமண்டூர் தர்மாபுரம் கிராமம் அருகே அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியான பிச்சாண்டி (38) மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கனரக லாரி, பிச்சாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பிச்சாண்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி, தர்மாபுரம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், லாரி கண்ணாடியையும் சேதப்படுத்தினர்.
இந்த இரு சாலை விபத்துகள் குறித்தும் தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், விபத்தில் இறந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.