திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், 133-ஆவது மாத திருக்குறள் ஓதியபடி மலைவலம் வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டக் கவிஞர் பேரவைத் தலைவர் நல்ல.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முப்பாலகம் அமைப்பின் நிர்வாகி கோவிந்தராஜன், கவிஞர் பேரவை பொருளாளர் அம்பி, நிர்வாகிகள் மாணிக்கம், சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார்.
திருவண்ணாமலை அருணகிரிநாதர் விழாக்குழுத் தலைவர் தனுசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, திருக்குறள் ஓதியபடி மலைவலம் வரும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, திருக்குறள் தொண்டு மையச் செயலர் சண்முகம், திருக்குறள் ஆர்வலர்கள் காமராஜ், சீனிவாசன், வாசுதேவன், பலராமன், மோகன், தங்க விஸ்வநாதன், தரணி, அருணகிரி உள்பட பக்தர்கள், நவினா தட்டச்சுப் பயிலக மாணவர்கள் மலைவலம் வந்தனர்.