சபரிமலையின் புனிதம் காக்க மத்திய அரசு சிறப்புச் சட்டத்தை கொண்டுவரக் கோரி, திருவண்ணாமலையில் இந்து மக்கள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ.அசோக்குமார், நகரத் தலைவர் வ.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ர.விஜயராஜ் வரவேற்றார். கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் பரணிதரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, சபரிமலையின் புனிதம் காக்க மத்திய அரசு சிறப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும். ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.