திருவண்ணாமலை நகர அதிமுக சார்பில், அதிமுகவின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு நகரச் செயலர் ஜெ.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், தலைமைக் கழகப் பேச்சாளர் நடிகை வி.ஆர்.ஜெயதேவி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது: திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்படும். ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் செப்பனிடப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என்றார். கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.