வேட்டவலம் அருகே கோயில் பூசாரியைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
வேட்டவலத்தை அடுத்த நெய்வானத்தம் கிராமம், சின்னத் தெருவில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பூசாரியாக இதே பகுதியைச் சேர்ந்த மணிசேகர் (60) இருந்து வருகிறார். இவர், கடந்த 11-ஆம் தேதி கோயிலுக்கு வந்தபோது, கோயிலுக்கு எதிரே மழைநீர் தேங்கியிருந்ததாம்.
இதை மணிசேகர் குழாய் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த பொதுமக்களிடம் கோயிலுக்கு எதிரே அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையால் கோயில் எதிரே தண்ணீர் தேங்கும் நிலை வந்துவிட்டது என்று மணிசேகர் கூறினாராம்.
அப்போது, அங்கு வந்த மணிவண்ணன் (58), தன் மருமகன் தான் ஒப்பந்தம் பெற்று சாலையை அமைத்தார் என்றும், அவர் மீது வீண் பழி சுமத்தாதீர்கள் என்றும் கூறியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மணிவண்ணன், மணிசேகரை சரமாரியாகத் தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து மணிவண்ணனை கைது செய்தனர்.