மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆரணி கைலாயநாதர் கோயிலில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரிலும், மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரிலும் ஆரணி கைலாயநாதர் கோயிலில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆய்வுக்குழுச் செயலர் ராஜ்மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கைலாயநாதர் கோயில் பக்தர்கள் சங்கத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட நீதிபதியிடம் கோயிலின் தங்க நகைகள் சரியான முறையில் அரசுக் கணக்கில் ஏற்றப்படவில்லை.
வெள்ளிப் பொருள்களுக்கும் சரியான கணக்கு இல்லாமல் உள்ளது. கோயிலின் தேர் செய்யும் பணி மந்தமான முறையில் நடைபெற்று வருகிறது. கோயில் குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர்அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட புகார்களை கூறினார். இந்தப் புகார்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி, புகார்களை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதாக உறுதி அளித்தார்.