செங்கம் பகுதியில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடுவதற்காக வியாபாரிகள், பொதுமக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடுவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வரும் 13-ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு சிலை வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாகக் கூறி, செங்கம் - போளூர் சாலை, பெங்களூரு - செங்கம் சாலை, திருவண்ணாமலை - செங்கம் சாலை ஆகிய சாலைப் பகுதிகளில் சுமார் 10 பேர் கொண்டு கும்பல், அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கட்டாய வசூலில் ஈடுபடுகிறது. அப்போது, பணம் தர மறுப்போரை அந்தக் கும்பல் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதால், மேற்கூறிய சாலைப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
இதேபோல, செங்கம் நகரிலும் முக்கிய பிரமுகர்கள், வணிகர்களிடம் அந்தக் கும்பல் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே, செங்கம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக கட்டாய வசூலில் ஈடுபடுவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.