செங்கம் அருகே மான் வேட்டையாடிய 2 இளைஞர்களை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, மான் இறைச்சி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
செங்கத்தை அடுத்த பிஞ்சூர் பகுதியில் சிலர் புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை பங்கு பிரிப்பதாக வனத் துறையிருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில், வனத் துறையினர் பிஞ்சூர் பகுதிக்குச் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப் பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்வதற்கு தயார் செய்து கொண்டிருந்த இருவரை பிடித்து வனத் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் புதுப்பாளையம் அடிவாரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன்(28), வீரானந்தல் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (38) என்பது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் வனத் துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, மான் இறைச்சி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.