திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு வந்த புகார்களின் அடிப்படையில், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஜி.மகிழேந்தி வியாழக்கிழமை மாலை விடுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காதது தெரியவந்தது.
மேலும், 98 பேர் தங்கும் விடுதியில் போதிய வசதிகள் இல்லாதது, 12 பேர் தங்கும் அறையில் 8 பேருக்கு மட்டுமே கட்டில் வசதி இருந்தது என பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டது. இந்தக் குறைபாடுகளை விரைவில் சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜி.மகிழேந்தி எச்சரித்தார்.
போலி மருத்துவர் கைது: இதேபோல, திருவண்ணாமலையை அடுத்த குன்னியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (36),
10-ஆம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்குப் புகார்கள் வந்தனவாம். இதையடுத்து, நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் புதன்கிழமை இரவு சரவணன் வீட்டுக்குச் சென்று அவரைப் பிடித்து மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.