வந்தவாசி அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து, பெண்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி ஒன்றியம், பிருதூர் ஊராட்சிக்கு உள்பட்டது பரஞ்ஜோதி நகர். இந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பெண்கள், காலிக் குடங்களுடன் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலை, பிருதூரில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் வழங்காததைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்தச் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸார் அங்கு சென்று சமரசம் செய்ததன்பேரில்,
பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.