மாவட்ட அளவிலான கோ - கோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற புதுப்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான கோ - கோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் முதலிடமும், 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்தனர்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கண்ணதாசன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் முனியன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சான்றுகளை வழங்கிப் பாராட்டினார். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் காந்தி, மாணவர்களை வாழ்த்திப் பேசியதுடன், பரிசுகளையும் வழங்கினார்.
விழாவில், உடல் கல்வி ஆசிரியர்கள் குணச்செல்வன், ஜான்ரூபன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.