திருவண்ணாமலையில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்கான கிடங்கு அமைக்க திருவண்ணாமலை - மணலூர்பேட்டை சாலையில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தை ஆய்வு செய்ய நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் தெரு பொதுமக்கள், இந்தத் திட்டத்தை தங்கள் பகுதிக்கு கொண்டுவரக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டதால், இதே பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனராம்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவண்ணாமலை - மணலூர்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸார், வருவாய்த் துறையினர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.