காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜரின் 1000 ஆவது ஆண்டு திருஅவதார உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவமூர்த்தி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு திருஅவதார 10 நாள் உற்சவம் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து உற்சவர் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்நிலையில் திருஅவதார திருவிழாவின் முதல் நாளான சனிக்கிழமை தங்கப் பல்லக்கில் உற்சவர் ராமானுஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து மதியம் ராமானுஜருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.