தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து ஆம்பூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வருவது விவசாயிகளின் போராட்டமல்ல.
அது அய்யாகண்ணுவின் போராட்டம். லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பல்வேறு போராட்டங்களை புதுதில்லி ஏற்கெனவே சந்தித்துள்ளது. குடிநீர் பிரச்னைகளுக்கு மணல் திருட்டு, மணல் கொள்ளை தான் முக்கியக் காரணமாக உள்ளது. லாரி மணல் லோடு ரூ. 1,500 ஆக இருந்தது. தற்போது ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலிருந்து எடுத்துச் சென்று கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மணல் லாரி லோடு ரூ. 60 ஆயிரமாகும். ஆனால் அரசுக்கு செலுத்தப்படும் பணம்
ரூ.500 மட்டுமே.
மணலை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அந்தந்த மாநிலத்துக்குத் தேவையான மணலை அவர்களுடைய மாநிலத்தில் உள்ள ஆறுகளில் இருந்து அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.
25-ஆம் தேதி மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் நியாயமற்றது. மக்கள் இதனை எதிர்க்க வேண்டும் என்றார்.