ஆற்காடு அருகே விபத்துக்குள்ளாகி நின்ற வேனில் இருந்து 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆற்காட்டை அடுத்த சின்னதக்கை கிராமத்தில், ஆற்காட்டு- கண்ணமங்கலம் சாலையில் மினிவேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திமிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விபத்துக்குள்ளான வேனில் யாரும் இல்லாததால் வேனை சோதனையிட்டனர். அப்போது, வேனில் 2 டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்த போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.